தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Wednesday, December 5, 2012

பேரா. செ.வை. சண்முகத்தின் அணிந்துரை


நூல் - தமிழ் யாப்பிலக்கண உரை வரலாறு 



பேரா. செ.வை. சண்முகம்





   
     உரை என்பது இன்று கலைச்சொல்லாய் ஒரு நூலுக்குக் குறிப்பாகப் பழங்கால நூலுக்குப் பொருள் விளக்கம் தரும் முறையில் எழுதப்பட்டு மூல நூலும் சேர்ந்தது என்ற பொருளில் தமிழ் அறிஞர்களிடையே  வழங்குகிறது. அதன் பொதுப் பொருள் சொல் அல்லது பேசு என்பதால் ஒரு பொருள் குறித்த  பேச்சு  என்ற முறையில் பொருளும் புதைந்துள்ளது எனலாம்.  அதனால் பேச்சு உரை (நேரடிப் பேச்சு), எழுத்து உரை  ( எழுதிப் படிப்பது) என்ற தொடர்களும் இன்று கையாளப்படுகின்றன. தொல்காப்பியத்திலேயே உரை என்பது  பொதுப்பொருளிலிலும் (உரை எனத் தோழிக்கு உரைத்த கண்ணும்’, களவு. 21.3), உரைநடை என்ற பொருளிலும் (உரைவகை நடையே நான்கென மொழிப’ (செய்யுள்.171.5), இன்று வழங்கும் விருத்தி உரை என்ற சிறப்புப் பொருளிலும் (சூத்திரத்துப் பொருள் அன்றியும் யாப்புற/ இன்றியமையாது இயைபவை எல்லாம் / ஒன்ற உரைப்பது உரைஎனப் படுமே’, மரபு.104) பயின்று வந்துள்ளது. அதாவது இன்றைய கலைச்சொல் பொருள், விருத்தி உரை என்ற கலைச்சொல் பொருளின் விரிவு எனலாம். அது கல்வி பரவலாக்கம் அல்லது பொதுமையாக்கம் ( Universalization)  என்ற சமூக மாற்றத்தின் எதிரொலி.

Sunday, November 4, 2012

தமிழ் யாப்பிலக்கண உரை வரலாறு




தமிழ் யாப்பிலக்கண உரை வரலாறு என்னும் எனது நூலிற்கு 


கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் கவிதை வடிவில் எழுதிய வாழ்த்துரை




ஓர் எடுத்துக்காட்டு








வினாக்களின் தேயம்
கொண்டாடும் விழா என்பதா?
வேள்வி நடத்தும் மூளையின்
வேர்வைப் பெருமங்கலம் என்பதா?

குவிமையம் ஒன்றில் குதித்து
முத்துக் குளிப்பது என்பதா?
ஆய்வு என்னும்
அறிவுலக நடவடிக்கையை எந்த
வார்த்தைக் கட்டமைப்புக்குள்
வடிவம் கொடுத்துப் பேசுவது?

கனம் மிக்க
ஓர் ஆய்வு ஏடு எனது
கண்ணில் படும்போதும் நான் அதைக்
கையில் தொடும்போதும்
புலரிவானங்களை
வசப்படுத்திய புளகம்!

அப்போதெல்லாம்
ஓய்வெடுக்க உதகைக்கோ
கொடைக்கானலுக்கோ என் கவிதைகளை
அனுப்பவதில்லை நான்

ஆய்வேடு என்னுள்
அறிவுச் சிலிர்ப்புகளை, கருத்துக் கலவரங்களை
ஏற்படுத்தினால் அதைப்பார்த்து
என் கவிதைகள் ஆய்வாளர்க்குப்
பூச்செண்டுகள் தயாரிக்கும்
புதுப்பொறுப்பை ஏற்கும்.

என்
வளரும் நம்பிக்கைக்கும்
வாஞ்சைமிகு வாழ்த்துக்கும் உரிய
இளந்தலைமுறை ஆய்வாளர்களில்
ஒருவர் -
சூரிய மையத்தில் சுட்டெடுத்த
அறிவுக்கு அடையாளமான
என் மணியான
மாணவர் ய. மணிகண்டனின்
ஞானத்தமிழ்ப் பட்டறையில்
தயாரான தளவாடம்
இளமாறன்:

இவர்
யாப்பு நூல்
உரை வரலாற்றைக் கோப்புக் குலையாத
கோணத்தில் ஆய்ந்து கொடுத்துள்ள
திறம்
வியக்கத் தக்கது; விரும்பத் தக்கது.

உரைவகை எத்தனை?
உரையாசான்மார் வகைகள் எத்தனை?
உரைகளில் செயல்படும்
சமூக, சமய, அரசியல் இயங்கியல்
வன்மை மென்மைகள் எப்படி?
எல்லாம் இளமாறன் ஆய்வில் அத்துபடி!

தேமா, புளிமாக்கள் எல்லாம்
திரண்டுவந்து
இளமாறன் கன்னத்தில்
தித்திக்கும் முத்தம் கொடுக்கும் -
தங்கள்
இனவரலாற்றை ஆய்வுப் பேழையில்
வைத்துத் தந்ததற்காக...

உரைகளின்
போதுமை போதாமைகள் மீது
வெளிச்சம் பாய்ச்சி
விளக்கியதற்காக...

பாதைகளில்
விளக்கேற்றி வைப்பதுபோலத்
தக்க அறிஞர்கள்
அங்கங்கு ஆய்வுக்குள் வந்து
வினாக்கள் நிறுத்துவதற்காக,
விடைகள் பொருத்துவதற்காக...

தனது
திசுக்களிலும் தமிழ்மொழி
தேக்கி வைத்திருக்கும்
யாப்பு வளத்தை, யாப்பு வகைமைகளைப்
பிசகின்றித் தமிழன் உணரவும்
பிறருக்கு உணர்த்தவும்
உரைகண்டார் எல்லாம் அறிவுத்
திறப்பாட்டின் கரைகண்டார்!


உச்சத்தில் வைத்து
யாப்பருங்கல விருத்தி உரைபற்றி இந்த
ஆய்வேடு
உச்சரித்திருப்பதெல்லாம்
நிச்சயம் இளமாறனுக்குப் புகழ்ஒளியை
நிகழ்த்தும்.

திட்டமான நடை,
தேவையான மேற்கோள்கள்,
திட்பமான விவாதம்,
திருத்தமான விளக்கம் எல்லாமே

திரட்டப்பட்ட தரவுகள்,
ஆய்வு ஆதரவுகள், முரண், உடன்பாட்டு
மையங்களின் சிந்தனை முளைப்புகள்
ஆகியவற்றின் மீது
அறிவார்ந்த முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளன.

ஐந்தில் ஒன்றாகவும்
தனித்த ஒன்றாகவும் இலக்கண உலகில்
இயங்குகிறது யாப்பு! ஆனால்
அதுவே
சதையாய், எலும்பாய், நரம்பாய்
உயிர்படைத்த முழு உடலுமாகிக்
காலகாலமாய்
இயக்கி வந்துள்ளது இலக்கியங்களை.

இளமாறனை
இப்படி இலக்கணத்துப்பக்கம்
நெறிப்படுத்திய ஆசான்
மணிகண்டனுக்கும்,
இலக்கியத் துறைப் பேராசான்
அரசுக்கும்
என் பாராட்டுக்கள்.

ஆய்வுப் பொருள் பழையதாக
இருக்கலாம்.
ஆய்வுப் போக்குப் புதியதாக
இருக்கவேண்டும் என்பதற்கு
இன்றைய எடுத்துக்காட்டு:
சென்னைப் பல்கலையின்
தமிழ் இலக்கியத்துறை!


வெளியீடு:

மாற்று வெளியீட்டகம்,
சென்னை
தொடர்பு எண் : 9382853646


Wednesday, July 4, 2012

தொல்காப்பியம் - பன்முகவாசிப்பு


நூல் அறிமுகம்

எனது தொல்காப்பியம் - பன்முக வாசிப்பு தொகுப்பு நூலுக்கு இரா. வெங்கடேசன் எழுதிய நூல் அறிமுகம் இது.

தொகுப்பும் வாசிப்பும் 




ஒரு பிரதியின் மீதான அணுகுமுறை காலம்தோறும் அறிஞர்கள் தோறும் வெவ்வேறு நிலைகளில் மாறுபட்டு காணப்படும். தன் சமகால புரிதல் சார் வெளிப்பாடாகவே அவ்வணுகுமுறை அமையும். அவ்வாறான பல்வேறு சிந்தனைப் புள்ளிகளைத் தொகுத்து ஒருங்கு வைத்துப் பார்க்கின்ற போது அப்பிரதியின் பல்வேறு பரிமாணங்கள் வெளிப்பட்டு நிற்பதுண்டு. அந்தவகையில் இரண்டாயிரமாண்டு கால தமிழ்ப் புலமை மரபில் உச்சநிலையில் வைத்துப் போற்றப்படும் தொல்காப்பியப் பனுவலைப் பல்வேறு நிலைகளில் வைத்து அணுகி ஆராய்ந்த கட்டுரைகளைத் தொகுத்து தொல்காப்பியம் _ பன்முக வாசிப்புஎனும் நூலை பா.இளமாறன் உருவாக்கியுள்ளார்.

பல்வேறு அரிய துறைசார் தொகுப்பு நூல்களை உருவாக்கி வெளியிட்ட பேராசிரியர் வீ. அரசு அவர்கள் இந்நூலிற்குப் பொதுப் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்டுள்ளார். கங்குஎனும் இலக்கிய வெளியீட்டு வரிசையின் மூலமாகப் பல்வேறு அரிய நூல்களை வெளியிட்ட அனுபவம் பேரா. அரசு அவர்களுக்கு உண்டு. அவ்வனுபவத்தின் தொடர்ச்சியாக மாற்றுஎனும் இலக்கிய வெளியீட்டு வரிசையை உருவாக்கிப் பொதுப்பதிப்பாசிரியராகச் செயல்பட்டு வருகிறார். தமிழ் நாடகம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து கிறிக்கிஎனும் பெயரிலான நூல் மாற்று வரிசையின் முதல் வெளியீடாக வெளிவந்தது. அவ்வரிசையின் இரண்டாம் வெளியீடு தொல்காப்பியம் _ பன்முக வாசிப்புஎனும் நூல். மேலும் செவ்விலக்கியம் ஒவ்வொன்றுக்குமான ஆய்வுக்கட்டுரைகளைத் தொகுத்துத் தனித்தனி நூலாக வெளியிடஉள்ளதாகத்தெரிகிறது.

பேரா. வீ. அரசு அவர்களின் நூல் தொகுப்பு அனுபவத்தை உடனிருந்து பெற்றதன் வழியும் அவரின் வழிகாட்டுதலாலும் சிரத்தையுடன் பா. இளமாறன் இத்தொகுப்பு நூலை உருவாக்கி-யுள்ளார். தொகுப்பில் உள்ள கட்டுரைகளைப் பார்க்கும் பொழுது தொகுப்பின் சிரத்தையை நம்மால் உணரமுடிகிறது. தமிழில் வேறெந்தப் பனுவலுக்குமில்லாத தனியிடத்தைத் தொல்காப்பியத்திற்குத் தமிழ்ப் புலமைச் சமூகம் தந்துவருகிறது. தனித்து எண்ணும்படியான தன்மையை அப்பனுவல் பெற்றிருப்பது ஒரு முக்கிய காரணமாகும். அந்த வகையில் 19, 20 ஆகிய இரு நூற்றாண்டுகளில் அப்-பனுவல் குறித்து எண்ணற்ற ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்வழி தொல்காப்பியம் குறித்தான சிறந்த ஆய்வுக் கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுப்பது என்பது சிரத்தையான செயல்பாடேயாகும். அந்தச் சிரத்தையும் கடந்து சிறந்த கட்டுரைகளைத் தொகுத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்மொழியின் மரபு இலக்கண இலக்கியங்கள் சுவடியிலிருந்து அச்சுக்கு மாறிய சூழல் ஏற்பட்டதும் தமிழின் தனித்துவத்தை முன்னெடுக்கும் படியான ஆய்வுகள் தமிழ்ச்சூழலில் மிக வேகமாக நடந்தன. அதிலும் தொல்காப்பியம் அதன் காலம் குறித்த ஆய்வுகள் தமிழறிஞர்களிடத்து மிகுதியாக நடத்தப்பட்டன. சமஸ்கிருத இலக்கண மரபிற்கு இணையான இலக்கிய மரபைத் தமிழ்மொழியும் பெற்றுள்ளது என்று சொல்லவேண்டிய தேவையின் வெளிப்பாடாக அவ்வாய்வுகளைக் கருதலாம். பேராசிரியர் வெள்ளைவாரணர், பேரா. எஸ். வையாபுரிப்பிள்ளை, பேரா.தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் முதலானோர் தொல்காப்பியர் காலம் குறித்து எழுதியுள்ளனர். இவற்றுள் இருவரின் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. தொகுப்பில் மொத்தம் பன்னிரண்டு கட்டுரைகள் உள்ளன. தமிழியலின் அனைத்து துறைசார் ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகளும் தொகுப்பில் தந்திருப்பதன் வழி தொல்காப்பியப் பிரதியின் பன்முகத் தன்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது.

ஆய்வாளனுக்கும் வாசிப்பாளனுக்கும் ஒரு பிரதியின் பல்வேறு சிந்தனைகளை ஒருங்கு கிடைக்கப்பெறும் என்பது இவ்வாறான தொகுப்பு நூலின் முதன்மைப் பயனாகும். அதேவேளையில் எந்தப் பொருள் சமூகத் தேவையை ஒட்டி உருவாகிறதோ அந்தப் பொருளே வரவேற்கப்படும் என்பது சமூகவியல் உண்மை. அந்த வகையில் செம்மொழியாகத் தமிழ் அறிவிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் செவ்விலக்கிய வரிசையில் முதன்மையிலுள்ள தொல்காப்பியப் பனுவல் குறித்தான இத்தொகுப்பு நூல் வரவேற்கப்படவேண்டிய ஒன்றாகும். செவ்விலக்கியம் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளைத் தொகுத்து பல தொகுப்பு நூல்கள் உருவாவதற்கு தொல்காப்பியம் பன்முக வாசிப்புநூல் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
மாற்று வெளியீடு
முதற்பதிப்பு – 2008
விலை - 75
தொ.பே. 9382853646



Tuesday, July 3, 2012

இரு நூற்றாண்டுப் பதிப்பு வரலாற்றில் தொல்காப்பியம்


இரு நூற்றாண்டுப் பதிப்பு வரலாற்றில் தொல்காப்பியம்
குறிப்பு: 'இரு நூற்றாண்டுப் பதிப்பு வரலாற்றில் தொல்காப்பியம்' (இராசகுணா பதிப்பகம், சென்னை, விலை ரூ.75)  என்னும் தலைப்பில் வெளிவந்த எனது  நூலுக்கு பெருமாள்முருகன் அவர்கள் எழுதிய முன்னுரை இது;

வெளி நோக்கி விரியும் தேடல்



    
பொது வாசகர்களிடத்தும் தமிழ் இலக்கியக் கல்விப் புலத்திலும் இன்னும் போதுமான அளவு பதிப்பு தொடர்பான விழிப்புணர்வு உருவாகவில்லை. எனினும் தமிழிலக்கிய ஆய்வுச் சூழலில் குறைந்தபட்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சி தருகிறது. கல்விப் புலத்தில் இதற்கு முன்னும் பதிப்பு தொடர்பாக எழுதியவர்கள், பேசியவர்கள் இருந்தனர். அவர்களின்  ஆய்வுமுறை என்பது எவரையும் தொந்தரவு செய்யாதவை. ஆனால் இன்றைய ஆய்வுகள் அப்படியானவை அல்ல. பதிப்புக்குப் பின்னுள்ள அரசியல், காலச்சூழல் ஆகியவை பற்றியும் பதிப்புக் குறைபாடுகள் குறித்தும் வெளிப்படையாகப் பேசுகின்றன. இதுவரை வெளிப்படுத்தப்படாத பல முக்கியமான பதிப்பாசிரியர்கள், பதிப்புகள் குறித்துக் கவனம் குவிக்கும் வகையில் சான்றாதாரங்களோடு முன்வைக்கின்றன. யாரையாவது விமர்சனம் செய்தால் தம் உலகியல் பயன்கள் பாதிக்கப்படும் என்னும் அச்சத்தின் காரணமாகக் கருத்துரீதியான விவாதத்தைக்கூட முன்னெடுக்கத் தயங்கிய நிலை இன்றில்லை. மேலும் கருத்துரீதியான விவாதக்களம் இன்றைய ஊடக வாய்ப்புக்களின் மூலமாகக் குறிப்பிடத்தக்க அளவு சாத்தியமாகி இருக்கிறது.

 பழம் பதிப்புகளைத் தேடிக் கண்டடைவதற்கான சிரமமும் ஒப்பீட்டளவில் இன்று குறைந்திருக்கிறது. ஆனால் தமிழ்ப் பாடத்திட்டத்தில் இன்னும் பதிப்பியல் இடம்பெறவில்லை. நவீன இலக்கிய வாசகருக்கு உள்ள பதிப்புணர்வுகூடத் தமிழாசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இல்லை. தமிழ்க் கல்வியில் எவ்விடத்திலும் பதிப்பு தொடர்பான குறைந்தபட்ச அறிமுகக் குறிப்புகள் கிடைப்பதில்லை. ஒன்றையொன்று பார்த்துச் சில சொற்களை மட்டும் மாற்றி எழுதப்பட்டுப் பாடநூல் விற்பனை நோக்கில் வெளிவந்திருக்கும் நூற்றுக்கணக்கான இலக்கிய வரலாற்று நூல்களில் பதிப்பு பற்றிய தகவல்கள் ஏதுமில்லை. ஒன்பதாம் நூற்றாண்டு தொடங்கிப் பதினேழாம் நூற்றாண்டு வரை  விரிவான இலக்கிய வரலாற்று நூல்களை எழுதியிருக்கும் மு.அருணாசலம் மட்டும் தம் நூல்கள் சிலவற்றில் பதிப்புகள் தொடர்பான தகவல்களைக் கொடுத்துள்ளார். மூல நூல்கள் எதையும் பார்க்காமலே எழுதப்படும் இன்றைய இலக்கிய வரலாறுகளில் பொதுத்தகவல் பிழைகளே மலிந்து கிடக்கும்போது பதிப்பு பற்றிய செய்திகளை எதிர்பார்ப்பது மிகைதான். 

பாடத்திட்டத்தில் பதிப்பியல் இடம்பெறுவதுடன் அதை நூலகத்துடன் தொடர்புபடுத்தும் செய்முறை வகுப்புகளும் அவசியம். அதேபோலப் பதிப்பியல் தொடர்பான ஆய்வுக்களங்களும் இன்னும் விரிவடைய வேண்டும். பதிப்பு நுட்பங்கள், நெறிமுறைகள் தொடர்பான ஆய்வுகள் பெருக வேண்டும். இது பதிப்பாசிரியரின் உழைப்பு சார்ந்த விஷயம் மட்டுமல்ல. பதிப்பு நுட்பங்களின் வளர்ச்சி என்பது அதற்குரிய வாசகர்களின் தன்மை, புலமைத்தளத்தில் நிலவிய கருத்து விவாதங்களின் போக்கு முதலியவற்றையும் உள்ளடக்கியது. பதிப்பாய்வு என்பது பாடவேறுபாட்டு ஆய்வுகளையும் முதன்மைப் படுத்துவது. பாடவேறுபாடுகள் தொடர்பாக விரிவான ஆய்வுகள் இதுவரை நிகழவில்லை. எப்போதும் பேசப்படும் பதிப்பாசிரியர்கள் சிலரைத் தவிர இன்னும் பேசப்படாத பதிப்பாசிரியர்கள் பலர் உள்ளனர். அவர்களை  வெளிச்சப்படுத்துவதும் முக்கியம். 

இப்படி இத்துறை விரிவுபெற வேண்டும் என்னும் போதே தமிழ்ச்சூழல் சார்ந்த எச்சரிக்கையும் அவசியம். விரிவு என்பது நீர்த்துப் போகச் செய்தல் என்பதுதான் நம் சூழல் சார்ந்த அர்த்தம். மிக ஆழமான ஒரு துறையாக ஆய்வுலகுக்கு அறிமுகமான நாட்டுப்புறவியலுக்கு நேர்ந்த நிலையையும் மனதில் கொள்வது நல்லது. பதிப்பாய்வு என்பது பழைய விஷயங்களைப் பேசுவது மட்டுமல்ல, அதை இன்றைய வாசக உலகோடு இணைக்க வேண்டுமானால் இன்றைய பதிப்புகளைப் பற்றியும் அக்கரையோடு பேசியாக வேண்டும். பதிப்பாளர்களைப் பகைத்துக்கொள்ளக் கூடாது என்னும் சுயநலன் சார்ந்த கருத்தே நவீனப் பதிப்புகளைப் பற்றிப் பேசத் தடையாக இருக்கிறது. அந்தக் கவலையின்றிச் சமகாலப் பதிப்புகளைப் பற்றியும் அவற்றில் உள்ள சிக்கல்கள் குறித்தும் பேசியவர்களுக்கு இன்று கூடுதல் கவனம் கிடைத்திருக்கிறதே தவிர எந்த மதிப்புக் குறைபாடும் நேரவில்லை. ச.வையாபுரிப்பிள்ளையும் மு.அருணாசலமும் இதற்குச் சிறந்த சான்றுகள். 

பழந்தமிழ் இலக்கியங்களை இன்று வெளியிடும் பதிப்பகங்கள் அவற்றைப் பலவிதமாகச் சிதைக்கும் போக்கைப் பதிப்பாய்வாளர்கள் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடக்க காலத்தில் வெளியிட்ட நகலச்சுப் பதிப்புகளைப் போன்றும் இன்று அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள கம்பராமாயண மறுபதிப்பைப் போன்றும் வெளியிடுவதே பழம் பதிப்புகளின் மதிப்பைக் காப்பாற்றுவதாகும். அதை வலியுறுத்தும் வகையிலான ஆய்வுகளும் விமர்சனங்களும் பதிப்பாய்வை இன்றைய காலத்தோடு தொடர்புபடுத்துவன. புதிய பதிப்புகள் வரும்போது அவற்றில் இன்றைய தேவையை ஒட்டிய விசயங்களைக் கோருவதும் பதிப்பாய்வாளர்களின் கடன். அதற்கு நிச்சயம் நல்ல பலன்கள் இருக்கும். ஆ.இரா.வேங்கடாசலபதி பதிப்பித்த புதுமைப்பித்தன் கதைகள்பதிப்பு பற்றிய கட்டுரை ஒன்றில் பழைய இலக்கியப் பதிப்புகளில் செய்யுள் முதற்குறிப்பகராதி இருப்பதைப் போல இதில் கதைத் தலைப்பு அகராதி இடம் பெறுவது அவசியம்எனக் குறிப்பிட்டிருந்தேன். இப்போது பழ.அதியமான் பதிப்பில் வெளியாகி யிருக்கும் கு.அழகிரிசாமி கதைகள்நூலில் கு.அழகிரிசாமி கதைகள் அகர வரிசைஇடம்பெற்றுள்ளது மகிழ்ச்சி தருகிறது. 

இந்நிலையில் இன்றைய தமிழ்க் கல்விப்புலத்திலிருந்து உருவாகி வரும் இளம் ஆய்வாளர்கள் பலர் மிகுந்த உழைப்பையும் ஆய்வுப் பார்வையையும் கொண்டுள்ளனர் என்பது உவப்பான செய்தி. அத்தகையோரில் பா.இளமாறன் குறிப்பிடத்தக்கவர். ஏற்கனவே பதிப்பும் வாசிப்பும்என்னும் நூலை வெளியிட்டுள்ளார். பொதுவாக இவரது ஆய்வுகள் இலக்கணப் பதிப்புகள் சார்ந்தவை. பதிப்பைப் பல கண்ணிகளோடு தொடர்புபடுத்தும் ஆய்வுப் பார்வை கொண்டவை. தொல்காப்பியம் தொடர்பாக விரிவாகக் கவனம் செலுத்துபவர். தொல்காப்பிய ஆய்வு மரபு இடைமுறிந்த காலத்து இளமாறன் அதன் இணைப்புக் கண்ணியாக விளங்குகிறார் என்று சொல்லத் தோன்றுகின்றது. இவரது கட்டுரைகள் ஆய்வு முறையியலை உள்வாங்கி அதனை உயிர்ப்புடன் பின்பற்றுபவை. ஆய்வுக் கட்டுரையின் பின்னிணைப்பாக வகைப்படுத்தி இவர் வழங்கும் தரவுகள் இவரது ஆய்வுக்கான நம்பகத்தன்மையைக் கொடுப்பதோடு மேலாய்வோருக்குச் சிரமத்தைக் குறைக்கின்றன. தரவுகளை மறைத்துக் கொள்ளும் தந்திரம் அற்ற வெளிப்படைத் தன்மை இவரிடம் இருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது.

இவர் தரும் தகவல்கள் மதிப்பு மிக்கவையாகவும் பார்வைகளை உருவாக்குபவையாகவும் இருக்கின்றன. 1858இல் தொல்காப்பிய நன்னூல் பதிப்பைச் செய்த சாமுவேல் பிள்ளையைப் பற்றியும் அவரது பதிப்பு நுட்பங்கள் குறித்தும் இவர் எழுதியுள்ள விரிவான கட்டுரையில் மிக முக்கியமான தகவல் ஒன்றைத் தந்துள்ளார். 1868 தொடங்கி 1950 வரை வெளிவந்த தொல்காப்பியப் பதிப்புகளில் சாமுவேல் பிள்ளையைப் பற்றியோ அவரது பதிப்பைப் பற்றியோ குறிப்பிடவில்லை என்பதுதான் அது. புரசபாக்கம் ஸ்ரீசாமுவேற் பண்டிதரவர்கள் தமது சொந்தக் கையினால் எழுதி வைத்திருந்த பிரதி ஒன்றைத் தாம் பயன்படுத்தியதாகக் குறிப்பிடும்சி.வை.தாமோதரம் பிள்ளையும் தமது பதிப்புரையில் சாமுவேல் பிள்ளை பதிப்பைச் சுட்டவில்லை. இந்தத் தகவல் வேறொரு சிந்தனைக்கு இட்டுச் செல்கிறது. உ.வே.சாமிநாதையர் தமது சீவக சிந்தாமணிப் பதிப்பில் அவருக்கு முன் சீவக சிந்தாமணி நாமகள் இலம்பகத்தைப் பதிப்பித்த ரெவரெண்ட் பவர் பற்றி எந்தக் குறிப்பையும் தரவில்லை என்பது ஏற்கனவே பலரும் சொன்ன செய்தி. பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பதிப்பாசிரியர்கள் தமது பதிப்புரைகளில் முந்தைய பதிப்புகளைக் குறிப்பிட வேண்டும் என்னும் உணர்வைக் கொண்டிருக்கவில்லை என்று சொல்லலாமா? பதிப்பாய்வுகள் முக்கியத்துவம் பெற்ற பின்னர் ஒரு பதிப்பில் முந்தைய பதிப்புகளைக் குறிப்பிட வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு உண்டாகியிருக்கக் கூடும். பதிப்பு நெறிமுறை சார்ந்த அறமாக இன்று கருதப்படும் விஷயம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கவனத்திற்குரியதாக இருந்திருக்கவில்லையோ என்று தோன்றுகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பதிப்புகளை முழுமையாக ஆராய்ந்தால் இதைப் பற்றி முடிவுக்கு வர இயலும்.

தொல்காப்பியம் தமிழரின் அடையாளமாக மாறியமைக்குப் பதிப்பாசிரியர்கள் செய்த பங்களிப்பை விவரிக்கும் இவரது ஆய்வு மிகவும் முக்கியமானது. ஒரு நூலின் மேல் கட்டமைக்கப்படும் புனைவுகள் படிப்படியாக அவிழ்ந்து அது வேறொரு பரிமாணம் பெறுவது சாத்தியம் என்பதற்குத் தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் நிதர்சனமான சான்றுகள். தமிழ் இலக்கியக் கல்வியில் தொல்காப்பியம் இன்றுவரை மையமான இடத்தைப் பெற்றிருக்கும் அதிசயம் விரிவான ஆய்வுக்குரியது. இடையிடையே பல்வேறு இலக்கண நூல்கள் தோன்றிய போதும் அவை அனைத்தும் தொல்காப்பியத்தின் வழி, சார்பு நூல்களாகவோ தொல்காப்பியச் சிந்தனைக் குழுவுக்கு எதிரான ஒன்றாகவோ தாம் இருந்திருக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இவ்விதம் ஒரு நூல் தனித்தன்மை பெற்றிருப்பது சாதாரண விஷயமல்ல. இதை விளக்குவது அவ்வளவு எளிதும் அல்ல. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பதிப்பாக வெளியான இந்நூல் படிப்படியாக நூறு ஆண்டுகளுக்குள்  பெற்ற அடையாளத்திற்குள் பல நூற்றாண்டு மரபுத் தொடர்ச்சி இருக்கிறது என்றே தோன்றுகின்றது. அதை நோக்கிய ஒரு அடிவைப்பாக இளமாறனின் கட்டுரை அமைந்திருக்கிறது. 

பதிப்பாய்வில் கவனம் கொள்ள வேண்டிய முக்கியமான பகுதி பாட வேறுபாடுகள். பதிப்பாசிரியர்கள் பாடத்தை நிர்ணயிக்கப் பல்வேறு அளவுகோல்களைக் கைக்கொண்டுள்ளனர். ஆனால் அவற்றைப் போதுமான அளவு அவர்கள் பதிவு செய்து வைக்கவில்லை. அளவுகோல்களைக் கண்டறிவதே இன்று முக்கியமான ஆய்வாக விரியக்கூடியது. பாட வேறுபாடுகளை முன்வைத்து ஒரு நூலின் வாசிப்பு வரலாற்றை உருவாக்கவும் இயலும். இளமாறன் தம் ஆய்வில் பாட வேறுபாடுகள் சார்ந்தும் கவனம் கொண்டுள்ளார். அவரது முந்தைய நூலில் மாறனகப்பொருள் பாட வேறுபாடு தொடர்பாக எழுதிய கட்டுரை சிறப்பானது. இந்நூலில் தி.வே.கோபாலையர் பற்றிய கட்டுரை இத்தன்மை கொண்டுள்ளது. ‘...மூலபாடத்தை முன்வைப்பதில் கோபாலையரிடம் சில சிக்கல்கள் காணப்படுகின்றன. சில அடிகள் மாறியும் விடுபட்டும் உள்ளன. ஆனால் இக்குறைகளை அவரின் பதிப்பு உருவாக்க முறை பூசி மெழுகுகிறதுஎன்று இளமாறன் குறிப்பிடுகிறார். மூலபாடம் தொடர்பாகக் கோபாலையரிடம் காணப்படும் சிக்கல்களுக்குக் காரணம் அவரது பதிப்பு உருவாக்க முறைதான் என்று கணிப்பது பொருத்தமாக இருக்கிறது. உரை மரபிலிருந்து பதிப்பு மரபை நோக்கிஎன்னும் கட்டுரைத் தலைப்பு கோபாலையரின் பதிப்பு உருவாக்க முறையை மையமாக்கிப் பொருத்தமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.  தான்கொண்ட பாடத்தையே மூலபாடமாக நிர்ணயிக்கும் அவர், வேறுபாடங்களை அடிக்குறிப்பில் தருவதில்லை. அவ்வாறு தருவது பதிப்பு மரபு மட்டுமல்ல, பதிப்பு நெறிமுறை. பயன்பாட்டுப் பதிப்பு என்னும் அவரது நோக்கம் இந்த நெறிமுறைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பதிப்பாய்வில் பாட வேறுபாடுகளைக் கவனத்தில் கொண்டால் இவ்விதம் முக்கியமான சில முடிவுகளை எட்ட முடியும்.

இத்தொகுப்பில் உள்ள ஐந்து கட்டுரைகளில் தொல்காப்பியம் தொடர்பானவை மூன்று. கோபாலையர் பற்றியது ஒன்று. மற்றொரு கட்டுரை பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலக்கணப் பயில்வு நூல் உருவாக்கம்என்பதாகும். மிகுந்த உழைப்புடன் இளமாறன் உருவாக்கியுள்ள கட்டுரை இது. நமது கல்வி மரபில் இலக்கணப் பயில்விற்கு தொடர்முக்கியத்துவம் இருந்து வந்துள்ளது. இலக்கியத்தைப் போலவே இலக்கண உருவாக்கத்திலும் கல்வியிலும் மதம் செல்வாக்கு செலுத்தியிருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கல்வி முறை மரபும் நவீனமும் இணையாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம் என்று சொல்ல வேண்டும். கல்விக் கூடங்களின் பெருக்கம் நிகழ்ந்த அதேசமயம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை போன்ற மரபாசிரியர்கள் புகழ்பெற்று விளங்கினர். மகாவித்வானின் மாணவர்கள் ஓலைச்சுவடிகளோடு அச்சுப் பிரதிகளையும் கொண்டு பயின்றனர். பிரதாப முதலியார் சரித்திரம் எழுதிய வேதநாயகம் பிள்ளை நவீனக் கல்வி பயின்றவர் எனினும் மகாவித்வானோடு தொடர்பு கொண்டிருந்தவர். அவரைத் தம் ஆசிரியராகவே கருதும் இயல்பினர். இத்தகைய கல்விச் சூழல் நிலவிய காலமாதலால் இலக்கணப் பயில்விலும் நூல் உருவாக்கத்திலும் இதன் பிரதிபலிப்பைக் காணலாம். மரபான இலக்கண நூல்களைப் பயில்வதோடு அவற்றைப் போன்ற யாப்பில் புதிய நூல்களை உருவாக்கல் ஒருபுறம் நடைபெற்றுள்ளது. அதேசமயம் உரைநடையில் இலக்கணம் எழுதும் புதிய நடைமுறை பரவலாக்கம் பெற்றுள்ளது. 

இதைப் பற்றிப் பலவிதமான அவதானிப்புகளைச் செய்திருக்கும் இளமாறன், அக்காலத்தில் இலக்கணப் பயில்வு நூல்களால் ஏற்பட்ட நன்மை, தீமை எனப் பிரித்துச் சிலவற்றைச் சுட்டுகிறார். ஒரு காலமாற்றத்தை ஆய்வு செய்யும்போது நன்மை, தீமை எனப் பாகுபடுத்துவதன் பொருத்தம் குறித்து எனக்குக் குழப்பம் உள்ளது. மரபிலக்கண நூல்களின் வாசிப்பு பின் தள்ளப்பட்டு அவற்றின் சுருக்கத்தை மட்டும் அறிதல்என்னும் நிலை உருவானதைத் தீமை என மதிப்பிடுகிறார். மரபிலக்கண நூல் வாசிப்பில் செயல்பட்ட மதம், குழு சார்ந்த விஷயங்கள் படிப்படியாகப் பின் தள்ளப்பட்டமைக்கான தொடக்கம் எனவும் அச்சு ஊடகம் வெகுஜனப் பயில்வுக்கெனத் தனி நூல் உருவாக்கத்தையும் புலமைத்தளத்துக்கெனத் தனிநூல் உருவாக்கத்தையும் சாத்தியப்படுத்திய நகர்வு எனவும் இந்த மாற்றத்தைக் குறித்துச் சிந்தித்தால் நன்மை, தீமை என்னும் மதிப்பீடு மரபிலக்கண நூல்கள் மீதுள்ள ஈடுபாட்டின் காரணமாக எழுவது எனப் புரிகிறது. ஆகவே   ஒரு பயில்வு முறை பின் தள்ளப்பட்டுப் புதியதொரு முறை உருவாகியது என்னும் அவதானிப்பாக மட்டும் அதைக் கொள்வது சிந்தனையின் பரப்பை விரிக்கும் ஆய்வுமுறையாக இருக்கும்  எனத் தோன்றுகின்றது.

இளமாறனின் ஆய்வுக் கட்டுரைகள் புதிய புரிதல்களை வழங்குவதோடு வெவ்வேறு கோணங்களில் சிந்திப்பதற்கான தூண்டுதல்களையும் தருகின்றன. அதற்குக் காரணம் வளாகச் சுவர்களுக்குள் முடங்காமல் கதவுகளைத் திறந்துகொண்டு வெளி நோக்கி விரியும் தேடல் அவருக்குள் இருப்பதுதான்.

                                                                     ----------------------                               


Monday, July 2, 2012

இருபதாம் நூற்றாண்டில் தொல்காப்பியப் பதிப்புகள்

 

இருபதாம் நூற்றாண்டில் தொல்காப்பியப் பதிப்புகள்

(தெரிவு செய்யப்பட்டவை)

1.  தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (பகுதி 1) (அகத்திணையியல், புறத்திணையியல்), ச.பவானந்தம்பிள்ளை, மினெர்வா அச்சுக் கூடம், சென்னை, 1916

2.     தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (பகுதி 2) (களவியல், கற்பியல், பொருளியல்), ச.பவானந்தம்பிள்ளை, மினெர்வா அச்சுக்கூடம், சென்னை, 1916

3.     தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியர் உரை (பகுதி 3) (மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல்), ச.பவானந்தம்பிள்ளை, லாங்மென்ஸ் க்ரீன் அண்ட் கம்பெனியார், சென்னை, 1917

4.    தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியர் உரை (பகுதி 4) (செய்யுளியல், மரபியல்), ச.பவானந்தம்பிள்ளை, லாங்மென்ஸ் க்ரீன் அண்ட் கம்பெனியார், சென்னை, 1917

5.   தொல்காப்பியம் செய்யுளியல் நச்சினார்க்கினியருரை, ரா.ராகவையங்கார், தமிழ்ச்சங்க முத்திராசாலைப் பதிப்பு, மதுரை, 1917

6.   தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணம், பகுதி –க, (அகத்திணையியல், புறத்திணையியல்), நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1920.

7.     தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணம், அகத்திணையியலும், புறத்திணை யியலும், வ.உ.சிதம்பரம் பிள்ளை, பிரம்பூர், சென்னை, 1921.

8.     தொல்காப்பியம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், நமச்சிவாய முதலியார், ஸி. குமார சாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1922

9.    தொல்காப்பியம் மூலம் ( கருத்து, பாடபேதக்குறிப்பு முதலியவற்றுடன்), பி. சிதம்பர புன்னைவனநாத முதலியார், பி.என்.சிதம்பரமுதலியார் அன் கோ. மதுரை, 1922

10.  தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை, தி.த.கனகசுந்தரம்பிள்ளை, கழகப்பதிப்பு, 1923

11.  தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையருரையோடும் கந்தசாமியார் திருத்திய திருத்தங்களோடும் குறிப்புரையோடும், கழகப்பதிப்பு, 1923

12.    தொல்காப்பியம் பொருளதிகாரம் (மூலம்), கா. நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1924.

13.     தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணம் காவேரிபாக்கம் நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், காக்ஸ்டன் பிரஸ், 1927.

14.     தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணர் பதவுரை, வ.உ.சிதம்பரம்பிள்ளை, அகஸ் தியர் பிரஸ், அம்பாசமுத்திரம், 1928

15.   தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை, ரா.வேங்கடாசலம், கரந்தைத் தமிழ்ச்சங்கம்,1929

16.  தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம், (களவியல், கற்பியல், பொருளியல்), வ.உ.சிதம்பரம்பிள்ளை, வாவிள்ள இராமஸ்வாமி சாஸ்த்ருலு அண்ட் சன்ஸ், சென்னை, 1933

17.   தொல்காப்பியம் பொருளதிகாரம் முதற்பாகம் (நச்சினார்க்கினியர் உரை), இது எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்களால் ஓலைப்பிரதியைக் கொண்டு பரிசோதிக்கப்பட்டு ம.நா.சோமசுந்தரம்பிள்ளை ஆராய்ச்சிக்குறிப்புக்களுடன் எஸ்.கனகசபாபதிப் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது, சென்னை சாது அச்சுக்கூடம், 1934

18.   தொல்காப்பியம் பொருளதிகாரம் இரண்டாம்பாகம் (பேராசிரியம்), இது வே.துரைசாமி ஐயரவர்களால் ஏட்டுப்பிரதியோடு ஒப்பிட்டு ஆராய்ந்து திருத்தப்பட்டு ம.நா.சோமசுந்தரம் பிள்ளை ஆராய்ச்சிக்குறிப்புக்களுடன் எஸ்.கனகசபாபதிப் பிள்ளையால் பதிப்பிக்கப் பட்டது, சென்னை சாது அச்சுக் கூடம், 1935

19.   தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம், (மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல்), வ.உ.சிதம்பரம்பிள்ளை, வாவிள்ள இராமஸ்வாமி சாஸ்த்ருலு அண்ட் சன்ஸ், சென்னை, 1935

20. தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம் முழுவதும் வ.உ.சிதம்பரம்பிள்ளை, எஸ்.வையாபுரிப்பிள்ளை, வாவிள்ள இராமஸ்வாமி சாஸ்த்ருலுஅண்ட்சன்ஸ், சென்னை, 1935

21.  தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை, சி.கணேசையர் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளுடன் நா.பொன்னையாவால் பதிப்பிக்கப்பட்டது. சுன்னாகம் திருமகள் அழுத்தகம், 1937

22.   தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை, சி.கணேசையர் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளுடன் நா.பொன்னையாவால் பதிப்பிக்கப்பட்டது. சுன்னாகம் திருமகள் அழுத்தகம், 1938

23.   தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியார் உரை , மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, பவானந்தர் கழகம், சென்னை, 1941

24.    தொல்காப்பியம் மூலம், தி.சு.பாலசுந்தரம்பிள்ளை எழுதிய விளக்கக் குறிப்புகள், கழகம், 1943

25.   தொல்காப்பியம் பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்) பேராசிரியர் உரை, சி.கணேசையர் ஒப்புநோக்கித் திருத்திய திருத்தங்களோடும் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளுடனும் நா.பொன்னையாவால் பதிப்பிக்கப்பட்டது. சுன்னாகம் திருமகள் அழுத்தகம், 1943

26.    தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை, புலவர் ஞா. தேவநேயப் பாவாணர் அடிக்குறிப்புடன், கழகம், 1944

27.   தொல்காப்பியம் பொருளதிகாரம் (முதற்பாகம்) நச்சினார்க்கினியர் உரை, சி.கணேசையர் ஒப்புநோக்கித் திருத்திய திருத்தங்களோடும் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளுடனும் நா.பொன்னையாவால் பதிப்பிக்கப்பட்டது. சுன்னாகம் திருமகள் அழுத்தகம், 1948

28.  தொல்காப்பியம் ( மூலம்) பதிப்பாசிரியக் குழுவினரால் பல பிரதிகளை ஒப்புநோக்கிப் பரிசோதித்து வெளியிடப்பெற்றது, எஸ்.ராஜம், மர்ரே வெளியீடு, சென்னை, 1960

29.   தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியார் உரை , பல பிரதிகளைக் கொண்டு   பரிசோதித்துப் பதிப்பித்தவர் இராம.கோவிந்தசாமி பிள்ளை, தஞ்சை சரசுவதி மகால் நிர்வாகக் குழுவினருக்காக எஸ்.கோபாலனால் வெளியிடப்பட்டது. 1962

30.  தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கோவை முதற்பாகம் (கிளவியாக்கம், வேற்று மையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு) ஆபிரகாம் அருளப்பன், வி.ஐ.சுப்பிர மணியன், அருள் அச்சகம், பாளையங்கோட்டை, 1963

31.  தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடனார் விருத்தியுரையும் பழைய உரையும், கு.சுந்தரமூர்த்தி எழுதிய விளக்கவுரையுடன், கழகம், 1964

32.   தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரை, ஆராய்ந்து விளக்கக்குறிப்புகளுடன், அச்சிட்டார், அடிகளாசிரியர், கும்பகோணம் காவேரி கலர் அச்சுக்கூடம், 1969

33.    தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணர் (விளக்கவுரையுடன்), கு.சுந்தரமூர்த்தி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1969

34.  தொல்காப்பியம் சொல்லதிகாரம், கல்லாடனார் விருத்தி, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்,   தமிழ்நாடு அரசு, 1971

35.   தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை, கு.சுந்தரமூர்த்தி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1981

36.  தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியல் இளம்பூரணர் உரை, அடிகளாசிரியர், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1985.

37.    தொல்காப்பியம் பொருளதிகாரம் பிற்பகுதி (மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யு ளியல், மரபியல்), பேராசிரியர் உரை, (குறிப்புரையுடன்) கு.சுந்தரமூர்த்தி, அண்ணா மலைப் பல்கலைக்கழகம், 1985

38.   தொல்காப்பியம் பொருளதிகாரம்  நச்சினார்க்கினியர்உரை,தொகுதி 1,2, கு.சுந்தரமூர்த்தி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1986

39.   தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை, அடிகளாசிரியர், தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 1988.

40.  தொல்காப்பிய மூலம், பாடவேறுபாடுகள் – ஆழ்நோக்காய்வு, கே.எம்.வேங்கடராமையா, ச.வே.சுப்பிரமணியன், ப.வெ.நாகராசன், பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகம், திருவனந்தபுரம், 1996.

இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த தொல்காப்பியப் பதிப்புகளில் தெரிவு செய்யப்பட்ட பதிப்பு களின் பட்டியலே மேலே தரப்பட்டுள்ளன. இத் தெரிவு செய்யப்பட்ட பட்டியல் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்ட உரைகளின் பதிப்புகள், பெரும்பாலும் சுவடிகளை ஒப்புநோக்கிப் பதிப்பிக்கப்பட்ட பதிப்புகள், பதிப்புகளை  ஒப்புநோக்கிப் பதிப்பிக் கப்பட்ட பதிப்புகள், ஆராய்ச்சிப் பதிப்புகள், முதல் பதிப்புகள் என்ற பல்வேறு அடிப்படைகளில் தொகுத்தளிக்கப் பட்டுள்ளன.
தொல்காப்பியத்திற்கு வெளிவந்த புத்துரைப் பதிப்புகள் ( அரசஞ் சண்முகனார், பி.சா.சுப்பிர மணிய சாஸ்திரி, நாவலர் சோமசுந்தர பாரதியார், வேங்கடராஜூலு ரெட்டியார், புலியூர் கேசிகன், புலவர் குழந்தை, ச.பாலசுந்தரனார் என இன்னும் பலர் செய்த உரைகளோடு கூடிய பதிப்புகள்), உரைவளப் பதிப்புகள் (மு.அருணாசலம் பிள்ளை, ஆ.சிவலிங்கனார், க.வெள்ளை வாரணன், கே.பகவதி), ஒப்பீட்டுப் பதிப்புகள்(க.வெள்ளைவாரணன்,ச.வே.சுப்பிரமணியன், க.ப. அறவாணன், ரா.சீனிவாசன்) ஆங்கிலமொழிபெயர்ப்புகள், மறுபதிப்புகள் ஆகியவற்றின் விவரங்கள் இங்கு அளிக்கப்படவில்லை.
தொல்காப்பியத்திற்கு வெளிவந்த  பதிப்புகள் குறித்து விரிவான விவரங்களை அறிந்துகொள்ள பின்வரும் நூல்கள், கட்டுரைகள் பயனுள்ளவையாக இருக்கும்,

1.  சண்முகம்பிள்ளை, மு., தொல்காப்பியப் பதிப்புகள், (பக்.1-70), தமிழாய்வு தொகுதி-8, சென்னைப் பல்கலைக்கழகம், 1978

2.        மெய்யப்பன், ச., தொல்காப்பியப் பதிப்புகள், தொல்காப்பியச் சிந்தனைகள், அண்ணாமலை நகர், 1978, ப-ம். 46.

3.        கிருட்டிணமூர்த்தி, கோ., தொல்காப்பிய ஆய்வின் வரலாறு, சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை, 1990.

4.        சுப்பிரமணியன், ச.வே., தொல்காப்பியப் பதிப்புகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1992.

5.        மதுகேசுவரன், பா., தொல்காப்பியப் பதிப்பு வரலாறு, சந்தியா பதிப்பகம், 2008.

6.   தொல்காப்பியம், சங்க இலக்கியம்: பதிப்பும் பதிப்பாளரும், பதிப்பாசிரியர், ச.சிவகாமி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2009.