தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Saturday, March 28, 2020

மஞ்சள்வெயிலும் மாயச்சிறுமியும் நூல் விமர்சனம் - ஜெ.செல்வமுத்துமாரி

கவிதை நூல் விமர்சனம்







இல்லாது இருப்பவற்றை விஞ்ஞானத்தின் மூலம் இன்பமயமாக இருத்திக் கொண்டிருக்கிற இவ்வுலக நதியிலே நீந்திக்கொண்டிருக்கிற நம்முடைய மெய்ஞ்ஞானத்தின் உணர்வுகளை ஊர்ஜிதப்படுத்துகிறது பா.ஜெய்கணேஷ் அவர்களின் மஞ்சள் வெயிலும் மாயச் சிறுமியும்”.

மாயச்சிறுமி மஞ்சள் மலர்களில் தன்னைத் தொலைத்து
நீரில் மெல்ல கரைந்து தொலைந்து போனாள்’’
நிச்சயமாக கரைந்தது மாயச்சிறுமி மட்டுமல்ல இந்த மாரிச்சிறுமியும் தான்.
73ஏணிப்படிகளில் ஏறிவிட்டால் தனிமனித வாழ்வினுடைய அத்துணை உலகியலையும் ஒன்றுசேர்க்கும் உன்னத இடத்திற்கு செல்ல முடியுமா? ....முடிகிறது. ஏக்கம் துக்கம் தனிமை, மாயை, ஆசை, பிரமை, ஏமாற்றம், நயவஞ்சகம், நினைவுகள், ஞானம்,தேடல் என்று இத்துணை உணர்வுகளையும்
ஒருசேரத் தருகிறார் கவிஞர் ஜெய்கணேஷ்.

நன்றிக்கு வித்தாக தீர்த்த செம்மையாளர்களாக கர்ணன், கும்பகர்ணனையே பேசிக் கொண்டாடித் தீர்த்த நமக்கு பொட்டில் அடித்தது போல் பட்டுத் தெறிக்கிறது பாழ்ப்பட்ட மூளையின் மூலையில் சிட்டுக் குருவியின் செஞ்சோற்றுக்கடன்
தன்னை தலைமுறை தலைமுறையாக வாடி வதைத்த வாழும் கடவுள் விவசாயிக்காக
வம்சத்தின் செஞ்சோற்றுக்க டன்
தீர்க்க பொறுக்கிய நெல்மணிகள்
யாவும் நிலமெங்கும் சிதறவைத்து
கருமேகத்தின் ஊடுதல் பார்த்து
கரையோரம் காத்துக் கிடக்கிறது
சிட்டுக்குருவி”.
வாழ்க்கையில் பாதிகாலம் நாம் எவற்றுக்கு செலவழித்திருப்போம் என்று யோசித்துப் பார்த்தால் சட்டென்று பதில் வந்து விழுகிறது வேறெதற்கு தூங்குவதற்குத்தான். தூங்குவதற்கென்ற ஒதுக்கப்பட்ட இல்லை. நாம் ஒதுக்கிய அந்த நீண்ட இரவின் சத்தங்கள் என்ன என்பதை கவிச் சந்தங்களின் வாயிலாக அழகாக நினைவுகளில் படம் பிடித்து காட்டுகின்றது.

விழுங்க முடியா இரவுஇந்த இரவுக் கவிதையில் என்னுடைய இதயம் சுட்ட வரிகள்
பார்வையற்ற ஒரு நடோடியின்
விழித்திரையிலிருந்து வழிந்தோடுகிறது
இரவு எல்லாப் பக்கங்களிலும்
நான் நானாகத்தான் இருக்கின்றேனே!.. என்னுடைய உணர்வுகளின் ஒருங்கிணைப்பில் தான் வாழ்வின் பந்தயத்தில் ஓடுகின்றனவா? இல்லை எனக்கான ஒரு வேடமும், வீட்டிலுள்ள மற்றவர்க்காக சமுதாயத்திற்காக என்று இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு நொடிக்கும் ஒருநூறு வேடமிட்ட மனிதர்களாக என்னை மாற்றிக் கொள்கிறேனா? தாத்தாபோல், பாட்டிபோல் , அம்மா, அப்பா இவர்களைப் போலத்தான் இவர் என்று பறைசாற்றும் பட்சத்திலே நான் இத்துணை சிந்தனைகளையும் விதைத்த அற்புதமான நான்குவரிகள்

நகல்களும் பிரதிகளும்
மெதுவாய் என்னுள் இறங்க
நான் அசலற்ற பிரதியாய்
பிரதிகளின் பிரதியாய்

நாம் நாமாக இருந்த காலம் இறந்தகாலம் என்று நம்மை தூண்டிச் சொல்கிறது இருளின் கண்கள்
தெருப் புழுதியில் நட்பை தூய்மையாக்கினோம்,
உண்டைச் சோற்றில் நிலாவை உருவாக்கினோம்,
பேய்க்கதைகளின் பயத்திற்கு தைரியமூட்டினோம்,
முகத்தினை அம்மாவின் முந்தானையில் மூடிமறைத்தது. என்று பால்யகால நினைவுகளை இருளின்கண்கள்வாயிலாகப் படம்பிடித்துக் காட்டுகிறார் பா.ஜெய்கணேஷ்.

மரத்தின் இயலாமைகவிதையினைக் கண்களால் வாசிக்கும் பொழுது மனதின் மறுபக்கத்தில் ஊடுருவிச் சென்று உண்மையினைத் தெள்ளத் தெளிவாகவே எடுத்துரைக்கிறது நாடு நாசமாகக் காரணமாக இருக்கும் காரணிகளை எதிர்த்து நிற்க திராணி இல்லாத நம்முடைய இயலாமையை அறிவுறுத்துகிறார்.
நம்முடைய வாழ்வின் வழித்தடங்களாகிய நதியும் நதிக்கரையும் நீரற்ற நதித்தடங்களாகிப் போனதை அணு அணுவாக அலசித் தந்திருக்கிறார் தமிழ்ப் பேராசிரியர்.

பலிஆடு”-பாழ்பட்டு கிடந்த சமூகம் படிப்படியாக முன்னேறி பவளமாளிகைக்கு சென்றுவிட்டது என்ற பெருமகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளிக்கும் பொழுது இடையில் இடுப்பொடிந்து தரைமட்டமாவதை உணர்த்துகின்றது பலிஆடு தலைப்பிலானகவிதை.

இப்படி ஒவ்வொரு கவிதையும் உளியைக் கொண்டு செதுக்கும் சிற்பமாகப் படிப்போரை மனதளவிலே செதுக்குகிறது இல்லை செதுக்கிறார் கவிச்சிற்பி பா.ஜெய்கணேஷ்.

-ஜெ.செல்வமுத்துமாரி







1 comment: