தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Sunday, June 28, 2020

தொல்காப்பியம் - அறிமுகம்




தமிழ்ச்சமூக வரலாறெழுதுவதற்கு மூல இலக்கணமாக, அடிப்படை ஆதாரமாக இன்றும் நமக்கு இருப்பது தொன்மை இலக்கண நூலான தொல்காப்பியமே. வடவேங்கடம், தென்குமரிக்கு இடைப்பட்டதான நிலப்பரப்பில் வாழ்ந்த தமிழ் மக்களின் சமூகப் பின்புலத்தையும், வாழ்வுச் சூழலையும், மொழி அமைப்பையும் அடிப்படையாகக் கொண்டு உருவான இவ்விலக்கணம் அவர்களின் தொன்மையினையும், அடையாளத்தினையும், செம்மொழித் தகுதியினையும் பறைசாற்றுவதற்கு இன்று மிகமுக்கியத் தரவாகத் திகழ்கின்றது. அப்படிப்பட்ட இச்செவ்விலக்கணத்தின் ஆசிரியர் தொல்காப்பியர்.

இவரின் காலம் மற்றும் சமயம் குறித்து ஆய்வாளர்களிடையே பலவகையான கருத்துமுரண்கள்உண்டு. ஒரு சாரார் இவரின் காலத்தைக் கி.மு.விலும், சமயத்தைச் சைவர் என்றும், மற்றொருசாரார் கி.பி.யிலும், சமணர் என்றும் வெவ்வேறு வகையான சான்றாதாரங்களை முன்னிறுத்தி நிறுவியுள்ளனர். இவை குறித்த தெளிவான வரையறைகள் இன்றுவரை எட்டப்படவில்லை. இருந்தபோதிலும் இவையெல்லாவற்றையும் கடந்து தொல்காப்பியம் எனும் இவ்விலக்கணப்பிரதி இத்தனை நூற்றாண்டுகள் நிலைபெற அதன் திட்டமிட்ட முறையியலான ஒழுங்கமைவுமற்றும் செய்நேர்த்தி, எல்லாக் காலத்திற்குமான பொருத்தப்பாடு, பல்வேறு காலங்களில் எழுந்த பலப்பல உரைகள், முதனூல் வழிநூல் என்ற மரபில் பிற்கால இலக்கணங்களுக்கு முதனூலாக நின்றமைதல், தொடர்ச்சியாக வெளிவந்த பல பதிப்புகள், பல்வேறு கால வாசிப்புச்செயல்பாடுகள் ஆகிய அனைத்தும் மிகமுக்கியக் காரணங்களாக நின்று விளங்குகின்றன.

தொல்காப்பிய அமைப்பை நோக்கும்போது எழுத்து, சொல், பொருள்என மூன்றதி காரங்களாகப்பகுக்கப்பட்டு அதிகாரத்திற்கு ஒன்பது இயலென மொத்தம் 27 இயல் களையும்,1610 நூற்பாக்களையும் உள்ளடக்கி அமைகின்றது. எழுத்ததிகாரமும் சொல்லதி காரமும் தமிழ்மொழியின் அமைப்பையும் அவை செயல்படும் முறைமையினையும் ஒருகட்டமைப்புக்குள் கொண்டுவந்து நிறுத்தி மொழிக்கான பன்முகப் பரிமாணங்களை வரையறைசெய்கிறது. பொருளதிகாரமோ இம்மொழியைப் பேசக்கூடிய தமிழ்மக்களின் வாழ்நிலையை அகம், புறம் என இரண்டாகப் பகுத்து அவற்றைத் திணைகளின் அடிப்படையில் வகுத்து ஒரு இனக்குழுச் சமூகத்திற்கான பல படிநிலைத்தன்மைகளை விளக்கி அமைகிறது.

காலமாற்றத்தினாலும், மொழியின் அமைப்பு மாற்றத்தினாலும் இப்பிரதியை தொடர்ந்து விளங்கிக் கொள்ள,விளக்கிச்சொல்ல உரையாசிரியர்கள் பலர் முற்பட்டுள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், தெய்வச்சிலையார், நச்சினார்க்கினியர்ஆகியோராவர். இப்படியாக உரையாசிரியர்களின் உரைகளின் வழி வேறொரு தளத்தினாலான வாசிப்புமுறையைப் பெற்ற தொல்காப்பியம் முதன் முதல் சுவடியிலிருந்து 1847ஆம் ஆண்டு அச்சுச்சாதனம் ஏறி நூலாக வடிவம்பெற்றது. இம் முதல் தொல்காப்பிய எழுத்ததிகாரப் பதிப்பை நச்சினார்க்கினியர் உரையோடு பதிப்பித்து வெளியிட்டவர் மழைவை மகாலிங்கையராவார். இவரைத் தொடர்ந்து 1858ஆம் ஆண்டு சாமுவேல் பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ் என்பவர் உதவியுடன் தொல்காப்பிய மூலம் முழுவதையும் நன்னூல் மூலத்தோடு ஒப்பிட்டுத் தொல்காப்பிய நன்னூல்என்றதொரு பதிப்பை வெளியிட்டார். இப்பதிப்புதான் தொல்காப்பியம் மூலம்முழுவதையும் உள்ளடக்கி வெளிவந்த முதல் அச்சுப்பதிப்பு ஆகும்.

இதைத்தொடர்ந்து தொல்காப்பியத்திற்குத் தோன்றிய பல்வேறு உரைகளோடு கூடியஅச்சுப்பதிப்புகள் தொடர்ச்சியாக இன்றுவரை வெளியிடப்பட்டு வந்துள்ளன. இவ்வாறாகஅச்சுப் பரவலாக்கம் நூல்களின் உருவாக்கம் என்ற இந்தப்பின்புலத்தில் தொல்காப்பியம் 19, 20ஆம் நூற்றாண்டுகளில் பதிப்பாசிரியர்களாலும்,ஆய்வாளர் களாலும், மொழிபெயர்ப்பாளர்களாலும் வெவ்வேறு தன்மைகளில் மீள்கவனம் பெற்றன. பல திறனாய்வு முறைமைகளை உட்கொண்டு உருவான 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் ஆய்வுச்சூழல் தொல்காப்பியத்தை முதன்மைப்படுத்திமேலான ஆய்வு வரலாற்றைக் கட்டமைத்தது. இதில், தொல்காப்பியம் யாருக்காக எழுதப்பட்டது, எதற்காக எழுதப்பட்டது, அது ஒருவரால் எழுதப்பட்டதா அல்லது பலரால் எழுதப்பட்டதா, அதனுள் இடைச்செருகல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளனவா, இல்லையா என்பன போன்ற கேள்விகளும் தொடர்ச்சியாகப் பல்வேறு அறிஞர்களால் இக்காலக்கட்டத்தில் முன்வைக்கப்பட்டு வந்துள்ளது.

இவற்றோடு மார்க்சியம், அமைப்பியல், பின் அமைப்பியல், நவீனம், பின் நவீனம், பெண்ணியம், தலித்தியம் என நீளும் கோட்பாட்டுப் பின்புலத்திலும் இப்பிரதி கவனித்திற் குள்ளாக்கப்பட்டது. ஆக பல நூற்றாண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய தொல்காப்பியம் எனும் இலக்கணப்பிரதி ஒட்டுமொத்தத் தமிழ்ச்சமூக வரலாற்றில் எடுத்துள்ள வகிபாகத்தைக் கூர்ந்துநோக்கும் போதுதான் அப்பிரதிக்கான தனித்துவத்தை யும் அதன் விழுமியத்தையும் நாம் புரிந்து கொள்ளமுடியும்.

(புத்தகம் பேசுது சிறப்பு மலரில் வெளிவந்த கட்டுரை)


 

No comments:

Post a Comment