தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Monday, July 20, 2020

ஆண் கவியும் பெண் பெயரும்

ஒருமுறை நண்பராக நினைச்ச ஒருத்தர்கிட்ட பேசிகிட்டு இருந்தன். முதுகலை படிச்சப்ப. உங்களுக்கு பிடிச்ச இரண்டு பெண் கவிஞர்கள சொல்லுங்கன்னு. அவர் உடனே வேகமா சுஜாதா மீரான்னு சொன்னார். சொன்ன கையோட அரை பக்கம் விளக்கம் வேற. இருங்க அவங்க ரெண்டு பேரும் ஆண் கவிஞர்கள்னு சொன்னன். உனக்கு தெரியுமா எனக்கு தெரியுமான்னு பயங்கர கோவத்தோட வேணும்னா இன்னும் ரெண்டு பேர சொல்லவான்னு கேட்டாரு. கையெடுத்து கும்பிட்டு அத்தோட திரும்பனதுதான் இன்னும் அவர சந்திக்கல. தொல்காப்பியத்துல இருந்து அதுக்கு சைடு ரெபரன்ஸ்லாம் கடைசியா தந்தாரு பாருங்க. அதான் ரொம்ப பொறுத்துக்க முடியல.

Sunday, July 19, 2020

தோசை என்பது கலை

தோசை ஊத்தத் தெரியல நீலாம் என்னடா இத்தனை வருஷம் கடையில வேல பாக்கற. ஒவ்வொரு வருஷ தேர் திருவிழா வியாபாரத்துக்கும் இந்த மாஸ்டருங்கள நம்பி நம்பி ஏமாற வேண்டியதா இருக்கு. ஒருத்தனும் ஒழுங்கா இருக்க மாட்டறானுங்க. நீலாம் என்னதான் பண்ணபோறியோன்னு எங்க மாமா தலையில அடிச்சு திட்டனப்போ ஒரு கோவம் வந்துச்சு. 

என்னா பெரிய தோசைன்னு களத்துல இறங்கினன். பெரிய அடுப்பு பெரிய தோசைக்கல்லு. அடுப்ப பராமரிக்கறதே முத வேல. தோசைக்கல்ல பக்குவமா வச்சிக்கணும். மாவு சரியான கரைசல்ல இருக்கணும். தோசையோட வெரைட்டிஸ் எல்லாம் தெரிஞ்சிக்கணும்னு ஒவ்வொன்னா இறங்கிக் கத்துக்கிட்டன். ஒரு வருஷம்தான். பரோட்டா,தோசை, பரோட்டாவின் வகைகள், தோசையின் வகைகள்னு என அத்தனையிலயும் அத்துபடி. 

மூணுவருஷம் நான் தான் எங்க ஊரு தேர் திருவிழாவுல மாஸ்டர். நூறு கிலோ பரோட்டாவ சாதாரணமா தட்டி போடற அளவுக்கு டிரெயினிங். மூணு வருஷத்து முன்னடி வந்த மாஸ்டரே வாயப் பொளந்து நான் இனி வேணாம்னு திரும்பிப் போயிட்டாரு. தலைதட்டன எங்க மாமாவே கணேஷான்னு ஆயிட்டாரு. 

பி.எச்டி சேந்த  பிறகும் ஊரு பக்கம் போணம்னா கணேஷ் ஒரு ஆப்பாயில் உங்ககையால போடன் தோசை ஒன்னு ஊத்தன்னு ஊர்க்காரங்க வந்து நிக்கப்பறப்ப உண்மையாவே நாம நல்லதான் வேலை பண்ணிருக்கோம்னு தோணும்.

எங்க மாமாவோட அந்த அன்பான அடிதான் ஒவ்வொரு வேலையையும் கையில எடுக்கறப்ப உற்சாகப்படுத்தும்.. சில நேரங்கள்ல நம்ம மேல விழற அடிகள சாதாரணமா எடுத்துக்கக்கூடாது. அந்த அடிகள் நம்மளோட வாழ்க்கைப் பாதைகளை நமக்குக் காண்பிக்கற அடிகளாக கூட இருக்கும்.

புகைப்படம்: k. சுரேஷ்குமார்

இங்க் அடிப்போமா

போன வருஷம் பள்ளிக்கூடம் லீவ் விட்டப்ப ஒரு பையன் கிட்ட கேட்டன். லீவு விட்ட பிறகு இங்க் அடிச்சிக்கிட்டிங்களாடான்னு. இங்க்னா என்ன அங்கிள்னு கேட்டான் முதல்ல. அப்பறம் விளக்கி சொன்ன பிறகு  அய்யய்யோ அங்கிள் என்ன அசிங்கம் இது. நீங்க டர்டி அங்கிள்ன்னு சொன்னான். 

ஐஞ்சாவதுல இருந்து நினைவு இருக்கு இங்க் பேனாதான் கையில இருக்கும். மேல கீழ அத ஊத்தி நிரப்பறதுக்குள்ள பெரும்பாடு. ஹீரோ பேனா தான் எங்க கனவு. விலை கொஞ்சம் கூட. தொலைச்சிருவ தொலைச்சிருவன்னு சொல்லியே வீட்ல அவ்ளோ சீக்கிரம் வாங்கித் தர மாட்டாங்க. அவங்க வாய் எவ்ளோ மோசம்னு வாங்கித் தந்த உடனேயே தெரிஞ்சிரும். தொலைச்சி அடியும் வாங்குவன். நான் சொல்லல நீ தொலைப்பன்னு வேற பெருமை பீத்துங்க. கடுப்பா இருக்கும்.

Saturday, July 18, 2020

கட்டைப் பை

பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை விட்ட கையோட எங்க பாட்டி வீட்டுக்கு கிளம்புவோம். புது பேண்ட் சட்டை எல்லாம் போட்டு ஜோரா ரெடியாயி நிப்பன். எங்க அம்மா என் தங்கச்சி எல்லாம் ரெடியாயி வெளிவந்து சரிசரி அத எடுத்துக்கோன்னு சொல்வாங்க.
 
என்னன்னு பாத்தா பெரிய கொஞ்சம் கிழிஞ்ச கட்டப்பை. அப்ப ஒரு கடுப்பு வரும்பாருங்க. எம்மா இதுக்கு நான் ஊருக்கே வரலன்னு ஓரமா ஒக்காந்து அழுவன். எங்கம்மா எங்களாலலாம் தூக்க முடியாது. ஆம்பள பையன் நீதான் தூக்கிட்டு வரணும்னு பஞ்ச் வேற. 

தூக்கமுடியலனா சொல்லுடா தலைமேல வச்சிரன் ஈஸியா இருக்கும்னு சொல்லும். அப்படியே முடிவுக்கு வந்து தூக்கின பிறகு எதிர்க்க யாராவது வந்தா கட்டை பைய பட்டுன்னு வச்சுட்டு யாருக்கும் தெரியாம அங்க இங்கன்னு வேடிக்கை பாப்பன். போன பிறகு பயணம். பஸ்ஸூல எனக்கும் கட்டப் பைக்கும் எந்த சம்மந்தம் இல்லன்னு இருப்பன். பேண்ட் சட்டை டிப்டாப் டிரஸ் போட்டா இந்த பிரச்சனை. 

லுங்கி கட்டிட்டா நம்மள விட லோக்கல் யாரும் இல்லன்னு திரிவோம். கருவாட்டுச் சந்தைக்குள்ள எங்க மாமா கூட தெருத்தெருவா திரிவன். இதே பழக்கம்தான் இப்பயும் எங்கயாவது வந்து சேந்துருது. யாருக்காவது உடம்பு சரியில்லனா  ரோட்டுக் கடையில பழம் வாங்கினா கருப்பு கேரிபேக்ல போட்டுக் கொடுக்கறான்னு ரிலையன்ஸ் ப்ரஷ்லதான். பெருமைக்கு எருமை மேய்க்கறது இதுதான்னு அப்பப்ப மூளை சொன்னாலும் பிரஸ்டீஜ்க்கு செத்தவங்களாச்சே  நாம. விட்டுருவோம்மா என்ன.

புகைப்படம் . கு. சுரேஷ்குமார்

Wednesday, July 15, 2020

இளம் ஆய்வாளர் வரிசை - முனைவர் கை. சங்கர்


    முனைவர் கை. சங்கர் அவர்களைத் தொல்காப்பியரின் மாட்டு குறித்த ஆய்வுக்கட்டுரைக்காக முதன்முதலாகத் தொடர்பு கொண்டேன். அவர் மாட்டு என்னும் இலக்கணமும் நச்சினார்க்கினியர் உரையும் என்னும் தலைப்பில் நூல் எழுதியிருந்தார். அந்த நூல் குறித்து அவரோடு உரையாடும் போதுதான் எனக்கு அவர் அறிமுகமானார்.

மாட்டு குறித்து அன்று அலைபேசி வழியாக நிகழ்த்திய விவாதங்களி லிருந்தும் அவர் நூலை வாசித்ததன் வழியும் சங்கர் அவர்களின் ஆய்வின் ஆழத்தை நான் அறிந்துகொண்டேன். அது மட்டுமல்லாது ஆய்வு அறம் கொண்டவர்களில் இவரும் ஒருவர். விரிவாக வாசித்துக் கொண்டிருப்பவர். சங்க இலக்கியங்கள் தொடங்கி நவீன இலக்கியங்களோடு வேறு பல துறைகளையும் நன்கு அறிந்தவர்.

தற்போது நந்தனம் அரசினர் ஆடவர் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் சங்கர் அவர்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வழியாகத் திருக்குறளும் பொருள்கோளும் என்னும் தலைப்பில் ஆய்வு நிகழ்த்தி 2007 ஆம் ஆண்டு முனைவர்பட்டம் பெற்றவர். திருக்குறளில் ஆய்வு மேற்கொண்டு ஆழ்ந்து வாசித்ததன் விளைவாகத் திருக்குறள் தொடர்பாக மூன்று நூல்களை வெளியிட்டுள்ளார்.

பல்கலைக்கழக மானியக்குழுவின் பெருந்திட்டத்தின் முனைவர் கை. சங்கர் அவர்கள் சிறந்த செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் இந்தச் செயலியில் 1812 முதல் 1950 வரை வெளிவந்த செம்மொழி இலக்கண இலக்கியப் பதிப்புகள் பலவற்றையும் ஆவணப்படுத்தியுள்ளார். நூல்கள் தேவைப்படுவோர் Sanga Elakkiyam APP என்னும் செயலியின் வழியாகவும் Sanga Elakkiyam. Org என்ற இணையதளம் வழியாகவும் பதிவிறக்கம் செய்து வாசிக்க இயலும்.

பேராசிரியர், ஆய்வாளர் என்பதோடு மட்டும் நின்றுவிடாமல் தம் சிந்தனையின் விருட்சங்களைத் திரையின் வழியாகவும் உலகெங்கும் கொண்டு சேர்த்துள்ளார். இவரின் மாணவர் நெல்சன் அவர்கள் இயக்கிய ஒருநாள்கூத்து, மான்ஸ்டர் எனத் தமிழின் இன்றியமையாத இரண்டு திரைப்படங்களில் சங்கர் தாஸ் என்னும் பெயரில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரைத்துறையிலும் தனி முத்திரை பதித்துள்ளார். தமிழ் பயிலும் மாணவர்கள் பேராசிரியர் பணி என்று மட்டும் தம்மைச் சுருக்கிக் கொள்ளாமல் திரை உலகிலும் சாதனை புரிய சங்கர் அவர்கள் முன்மாதிரியாக நிற்பதோடு எதிர்காலத்தில் பயணம் செய்ய இருப்பவர் களுக்காகத் தமிழ் இலக்கிய மாணவர்கள் திரைக்கதை, வசனம் எழுது தலுக்கான வழிகாட்டி பயிற்சி நூலாக திரைத்தமிழ் என்னும் நூலை விரைவில் வெளியிடவுள்ளார்.

முனைவர் கை. சங்கர் அவர்களின் நூல்கள்

2003 – ஒரு விடியலில் இருந்து இன்னொரு விடியல் வரை (கவிதை)

2008 – திருக்குறள் பொருள்கோள் உரை விளக்கம் ( அறத்துப்பால்)

2008 – திருக்குறள் உரைச் சிந்தனைகள்

2008 – மாட்டு என்னும் இலக்கணமும் நச்சினார்க்கினியர் உரையும்

2008 – சில குறள்கள் சில முடிவுகள்

திரைப்படப் பணி

(சங்கர் தாஸ் என்ற புனைபெயரில் எழுதியுள்ளார் )

2016 -  ஒரு நாள் கூத்து – (கதை, திரைக்கதை, வசனம்)

2019 – மான்ஸ்டர் (தமிழ்) – (கதை, திரைக்கதை, வசனம்)








Friday, July 10, 2020

நாற்றம் - வாசம்

                                   

நாற்றம் என்றால் சங்க இலக்கியத்தில் நல்ல மணம் என்று பொருள். பல்வேறு வினை வடிவங்களில் பல இடங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட சொல் காலப்போக்கில் இன்று நல்ல மணம் என்ற பொருளிலிருந்து மாறி துர்நாற்றம் என்னும் பொருளில் அமைந்துவிட்டது.

சங்க இலக்கியத் தலைவி தலையில் பூச்சூடி செல்லும்போது தலைவன் உன் கூந்தலில் இருந்து நறுநாற்றம் வீசுகிறது என்றால் தலைவி மகிழ்வாள்.

இளம் ஆய்வாளர் வரிசை - முனைவர் கி. பார்த்திபராஜா


எனது அனுபவத்தினூடே

தமிழ்ப் பேராசிரியர் என்பவர் ஆசிரியர் பணி என்பதைக் கடந்து பல்வேறு தளங்களில் செயல்படவேண்டிய ஒருவர் என்பதைத் தன் இயங்கியலின் வழி தொடர்ந்து அடையாளப்படுத்தி வருபவர் முனைவர் கி. பார்த்திபராஜா அவர்கள். முதுகலை வகுப்பில் முதன்முதலாக கி. பார்த்திபராஜா அவர்களை முனைவர்பட்ட ஆய்வாளராகச் சந்தித்தபோது இவர் குரலின் கம்பீரமும், உடை நேர்த்தியும், பாடம் நடத்தும் முறையும் என்னைக் கவர்ந்தன.

ஒரு ஆய்வாளர் எப்படி இருக்கவேண்டும் என்றும் எப்படிச் செயல்பட வேண்டும் என்றும் தனது உழைப்பாலும் செயலாலும் தொடர்ந்து எங்களுக்கு போதித்தவர். வகுப்பறை மட்டுமல்லாது வெளியில் பரந்துவிரிந்து இருக்கும் தமிழ் உலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தியவர். வீதி நாடகங்கள் வழியாக எனக்கு ஏதோ கொஞ்சம் நடிக்கவரும் என்ற நம்பிக்கையை முதன்முதலில் விதைத்தவர். பெண்கள் மீது நிகழ்த்தப்படும் குற்றங்களைத் தடுக்க கமிஷனர் அலுவலகத்தின் வழியே கொடுக்கப்பட்ட விழிப்புணர்வு தொடர்பாக வீதிநாடகங்கள் பலவற்றில் என்னை நடிக்க வைத்து பேர் பெற்றுத் தந்ததோடு அதற்கான தொகையையும் வாரா வாரம் வழங்கியவர். அந்தத் தொகையின் அவசியம் அன்றிருந்த நிலையில் எவ்வளவு பேருதவி என்பது சொல்லிமாளாது. இந்த நாடக அனுபவமே பின்னாளில் மேடை நாடகங்கள் பலவற்றில் நான் நடிக்க பேருதவி புரிந்தது.

Thursday, July 9, 2020

தமிழ் நூல் தொகுப்புப் பாடல்கள் - பக்தி இலக்கியம் (சைவம்)


சைவப்பெரியோர் நால்வர் அவதாரச் சிறப்பு

சொற்கோவுந் தோணிபுரத் தோன்றலுமென் சுந்தரனும்

சிற்கோல வாதவூர்த் தேசிகனு - முற்கோலி

வந்திலரே னீறேங்கே மாமறைநூல் தானெங்கே

எந்தைபிரா னைந்தெழுத்தெங் கே.


சமயக்குரவர் வயது

அப்பருக்கெண் பத்தொன் றருள்வாத வூரர்க்குச்

செப்பிய நாலெட்டிற் றெய்வீகம் - இப்புவியிற்

சுந்தரர்க்கு மூவாறு தொன்ஞான சம்பந்தர்க்

ணூந்தம் பதினா றறி.

Wednesday, July 8, 2020

தொல்காப்பிய முதல் பதிப்பு - 1847

பரோட்டா புராணம் - 1


பரோட்டா எல்லாருக்கும் சாப்பிடப் பிடிக்கும். எனக்கு போடப் பிடிக்கும். ரொம்ப நல்லாவே போடுவன்.

சின்னப் பசங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் விரும்பி சாப்பிடற உணவு. எங்க கடைக்கு சாப்பிட வர பொக்கை வாய்த்தாத்தா ஒருத்தர் பிச்சிப்போட்டு குருமாவ ஊத்தி ஊறவச்சி வாய்க்குள்ள அங்கயும் இங்கயுமா தள்ளி உள்ளதள்ளும். ஒருவழியா ஒருமணிநேரம் போராடி தின்னுமுடிக்கும். இவ்ளோ போராடி இத சாப்பிடனுமான்னு கேப்பன். அடப்போடா அதோட ருசியே தனிடான்னு சொல்லிப் போட்டு போகும்.

இரவு சாப்பிட்டா வயிறு வலிக்கும் செரிக்காது பொதுவா உடம்புக்கு கெடுதினு பேசற பல பெருசுங்களும் பரோட்டாவ விழுந்தடிச்சு ஓசியில யாராவது வாங்கித் தந்து தின்றப்ப தட்ட பிடுங்கி போட்டுறனும்னு தோணும். எவ்ளோதான் பரோட்டவ பல பேர் திட்டனாலும் அது மேல இருக்கற காதல் எனக்கு எப்பவும் குறைஞ்சது கிடையாது.

Tuesday, July 7, 2020

சுதந்திரம் என்பது...

எங்க
ஊர்ல ரெண்டு குளம் உண்டு. ஒன்னு தீர்த்த குளம். இன்னொன்னு துணிதுவைக்கிற குளம். சின்ன வயசுல  ஐந்து பேர் வீட்லயாவது டி.வி. பொட்டி இருந்துச்சு. ஆனா கழிவறை இருந்தது அதவிட குறைவுதான். பெரிய பல வீடுகளில் கூட குளியலறை இருக்கும் ஆனா கழிவறை இருக்காது. 

ரெண்டு புளியந்தோப்பு இருக்கும்.   பெரிய அந்தப் புளியந்தோப்புதான் ஊரோட கழிவறைக் களமா இருந்துச்சு. குளம் இருந்ததால ஆண்களுக்கு சொம்பு கூட தேவைப்பட்டது இல்ல. வயசுக்கேத்தவாறு காலைலயே ஊருல குரூப்பா கிளம்பிருவாங்க. அவங்க அவங்க வயசுக்கேத்த கதைகள பேசிக்குவாங்க. பல கதைகள் மறைவுல இருந்து கேட்டவங்களால ஊருக்குள்ள பரவி பெரிய பஞ்சாயத்துலாம் நடந்துருக்கு. தோப்புன்றதால ஒரே இடத்துல உக்காரணும்னு அவசியம் இல்ல. இடம்பெயர்ந்து மாறி மாறி உக்காருவோம். கூடவே கதைகளும் மாறும். 

இந்த சுதந்திரம் வீட்ல கழிவறை கட்டி அதுக்குள்ள கதவ சாத்தி உக்காந்து போனப்ப பறிபோனதா உணர்ந்தன். இடமாற்றம் கிடையாது, கதைகள் கிடையாது காத்து வசதி கிடையாது. கடுப்பா இருக்கும்.

ஆனா எங்க வீட்டுப் பெண்கள் பெருமூச்சு விட்டாங்க. விடியறதுக்கு முன்னாடியோ இருட்டின பிறகோதான் அடர்ந்த முள்வெளி பகுதிய டார்ச்லைட் வெளிச்சத்துல கடந்து உள்ள இருக்கற பாழடைஞ்ச வீட்ல போய்தான் கழிக்க முடியும். ஒவ்வொரு முறையும் உள்ள போய் வெளிய வரதுக்குள்ள உயிர்போயிரும் அவங்களுக்கு. பூச்சி பொட்டு, ஆளுங்க எட்டிப்பாக்கறது, முள்ளு குத்தறது இப்படி பல பிரச்சனைகள சமாளிச்சே பல வருடம் ஓடுச்சு. கழிவறை கட்டச்சொல்லி பலமுறை சொல்லியும் பொருளாதார நெருக்கடி இடம்தராம போய் பின்ன கழிவறை கட்டி முடிச்ச பிறகுதான் அவங்க சுதந்திர காத்து அந்த இருட்டறைக்குள்ள நிம்மதியா சுவாசிச்சாங்க. இது எங்க வீட்ல மட்டும் இல்ல. எல்லாக் கிராமங்களிலும் நகரத்தில் எல்லா நிலைகளிலும் புறந்தள்ளப்பட்ட மனிதர்களுக்கும் பொதுவானதுதான். 
துணிதுவைக்கிற குளம் தான் கழுவுற இடமா இருக்கும். சில நேரங்கள்ல யாராவது கடந்து போறப்ப பசங்க சொல்வானுங்க நம்ம கண்ண மூடிக்குவோம்டான்னு.

இப்பதான் பல்வேறு பாதுகாப்போட தீர்த்தகுளம் தீர்த்த குளமா இருக்கு. முன்னலாம் அதுவுமே இதுக்குதான் பயன்பட்டுச்சு. ஒருநாள் கோயிலுக்கு வந்த ஒருத்தர் குளத்துல கழுவி முடிச்சுட்டு இரண்டு கையாலயும் அந்தத் தண்ணிய தள்ளி விட்டுக்கிட்டு இருந்தார். என்னடா பண்றார்னு பாத்தோம். கொஞ்ச நேரத்துல அந்த தண்ணிய எடுத்து தலைல தீர்த்தமா தெளிச்சுகிட்டு இருந்தார் பயபக்தியோட. மொத்த பசங்களும் விழுந்தடிச்சு சிரிச்சுட்டானுங்க. இன்னைக்கு அந்தக்குளம் தூர்வாரப்பட்டு தீர்த்தகுளமா மட்டுமே இருக்கறத பாக்கறப்ப சநதோஷமா இருக்கு.

 இன்னொரு காரணம் இப்ப ஊர் வளர்ச்சி அடைஞ்சிருச்சு. பெரும்பாலான வீடுகள்ல கழிவறை கட்டியிருக்கு. புளியந்தோப்புக்கு போறவங்க எண்ணிக்கை குறைஞ்சிருச்சு. ஆனா முற்றிலுமா மாறுச்சுன்னு சொல்ல முடியாது. கழிவறைகள் இந்த சமூகத்துல ஆண்களுக்கு ஒருவித அனுவத்தையும் பெண்களுக்கு வேறுவிதமான அனுபவத்தையும் தர முடிந்த இடத்த புரிஞ்சிக்க முடிஞ்சுது.

புகைப்படம்: கு.சுரேஷ்குமார்...

இளம் ஆய்வாளர் வரிசை – முனைவர் ப. சரவணன்



தமிழ்ச்சூழலில் தொடர்ந்து இயங்கி வரும் ஆய்வாளர்களில் குறிப்பிடத்தக்கவர் முனைவர் ப. சரவணன் அவர்கள். பதிப்பு, தொகுப்பு, உரை, ஆய்வு எனப் பல தளங்களில் குறிப்பிடத்தக்க நூல்கள் பலவற்றை வெளியிட்டு தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். முதுகலைத் தமிழாசிரியராகப் பணிசெய்து வரும் ப.சரவணன் அவர்கள் முதுகலை ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம் ஆகியவற்றை சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் நிறைவு செய்தவர்.

ஆய்வியல் நிறைஞர் பட்டத்தின் போது அருட்பா x மருட்பா போர் குறித்து ஆய்வு செய்து பின்னர் அதனை நூலாகவும் வெளியிட்டு தமிழ்ச்சூழலில் பெரிதும் கவனம்பெற்ற ஆய்வாளராக மாற்றம் பெற்றார். அதன் தொடர்ச்சியாக அவர் உருவாக்கிய தொகுப்புகள், பதிப்புகள் எழுதிய உரைகள் அனைத்தும் செய்நேர்த்தி கொண்டவை.

Monday, July 6, 2020

சங்க இலக்கியத்தில் பாய்மரக் கப்பல்




வினா

பாய்மரக் கப்பல் என்பதில் உள்ள பாய் Sails என்பதற்கு இணையாக இன்று பயன்படுத்தப்படுகிறது. சங்க இலக்கியத்தில் பாய் இந்தப் பொருளில் வரவில்லை. வேறு எந்தச் சொல் பயன்படுத்தப்படது? அந்தச் சொல் எனக்குத் தெரியும். நீங்கள்  முயற்சி செய்து பார்த்தால்தான் ஒத்த சொல் கண்டுகொள்வது எவ்வளவு கடினம் என்பது தெரியும். முயன்று பாருங்கள்.

விடை:

நாவாய், வங்கம், கலம் முதலிய சொற்கள் கப்பல் போன்ற பெரிய படகுகளைக் குறிப்பிடும். பாய் என்ற மரக்கலத்தின் உறுப்பைக் குறிப்பதில்லை.
நல்லது, பாய் என்பதற்கு இணையான ஒத்த சொல் சங்க இலக்கியத்தில் "இதை" என்பதாகும்.
"இதையும் கயிறும் ... இரிய, சிதையும் கலத்தை" என்னும் பரிபாடல் (10.53) அடியைப் பார்க்கவும். மேலும் மதுரைக்காஞ்சி 536 வரியிலும் "இதை" என்பது பாய் என்னும் பொருளில் வருகிறது.
தமிழ் லெக்சிகனில் "சிதை" என்பதும்  இதே பொருளில் வருவது விளக்கக் கூடியது. அதில் உள்ள 'ச்' மறைந்தால் "இதை". திராவிட மொழிகளில் சகரம் மறைவது உண்டு.

விளக்கம்

நானும் எனக்கு அடுத்த தலைமுறையில் வருகிற நீங்களும் உவேசா போலவோ கோபாலையர் போலவோ அதி நினைவாற்றல் உடையவர்களாக முடியாது. தேவையும் இல்லை. எனவே நாம் நமக்குக் கிடைத்திருக்கிற  கருவி நூல்களைப் பயன்படுத்தி ஒத்த சொற்களைக் கண்டுகொள்ள வேண்டியிருக்கிறது. நான் "இதை" என்பதற்கு எப்படி வந்துசேர்ந்தேன் என்று சொல்கிறேன்.
1. முதலில் என்னிடம் இருந்த பிங்கல நிகண்டில் கப்பல், நாவாய் முதலிய சொற்களைத் தேடினேன். அவற்றின் உறுப்புகளுக்கான சொற்களைக் காண முடியவில்லை.
2 Burrow & Emeneau  Dravidian Etymological Dictionary தாங்கள் பொருளாகத் தந்துள்ள ஆங்கிலச் சொற்கள் அகரவரிசையில்  sail என்பது எந்தத் திராவிட மொழிகளில் இடம்பெற்றுள்ளது எனப் பார்த்தேன். எண் 1547 என்னும் பதிவின் உள்ளே 'சிதை' என்பது பெயர்சொல், sail பொருளாகத் தரப்பட்டுள்ளது. 
 தமிழ் லெக்சிகனில் சிதை என்னும் பதிவில் இந்தப் பொருள் உண்டு. ஆனால் திருவிளையாடல் மேற்கோள்.
3. தமிழில் சொல்லின் முதலில் உள்ள சகரம் மறைந்து சொல் நிற்கும் என்பதால் (சிறகு - இறகு, செட்டி - எட்டி) இதை என்னும் சொல் சங்க இலக்கியத்தில் இருக்கலாம் என்று தேடினேன். கண்டடைந்தேன். என் தேடுதல் கதையை உங்களிடம் பகிர்ந்துகொண்டேன்.


இந்தச் செய்தியை வழங்கியவர் பா.ரா.சுப்பிரமணியன் அவர்கள்

நன்றி: புகைப்படம்: இந்து தமிழ்திசை

ஆய்வறிஞர் வரிசை - பேராசிரியர் வீ. அரசு அவர்கள்

        

    பேரா. வீ. அரசு
அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையின் பேராசிரியர், துறைத்தலைவர் என பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வு என்பது அவரின் பதவிக்குதானே தவிர அவரது சிந்தனைக்கு அல்ல. பல்வேறு செயல்பாடுகளின் மூலமாக இன்றும் தொடர்ந்து இயங்கி வருபவர்.

    தஞ்சையில் பிறந்த இவர் தமிழில் முதுகலை, முனைவர் பட்டம் நிறைவுசெய்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறையில் 1985 ஆம் ஆண்டு விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார்.  2002 ஆம் ஆண்டு முதல் துறைத்தலைவராகப் பொறுப்பேற்று செயல்படத் தொடங்கிய இவர் பொருளாதாரத்தில் பின்தங்கிய தமிழ் பயிலும் மாணவர்கள் அந்தத் தடை இல்லாமல் மேல் படிப்பிற்கு செல்ல வேண்டும் என நினைத்து பல்கலைக்கழக மானியக்குழு வழங்கும் உதவித்தொகையைப் பெற மாணவர்களுக்கு வழிகாட்டியதோடு அதனைப் பெறவும் செய்தார்.

    கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்க வகுப்பறைகள் மட்டும் போதாது என்று உணர்ந்த பேராசிரியர் தமிழ் இலக்கியத்துறையின் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் வழியாக அறிஞர்கள், படைப்பாளிகள் எனப் பலரையும் அழைத்து அவர்களின் உரைகளின் வழியாகவும் விவாதங்களின் வழியும் மாணவர்களின் அறிவின் விரிவாக்கத்திற்கு துணைநின்றார்.

Sunday, July 5, 2020

இறையனார் களவியலுரைப் பதிப்புகள்

    


    தமிழ் இலக்கண மரபில் தொல்காப்பியத்திற்குப் பிறகு கிடைக்கிற இலக்கண நூல்களில் இரண்டாவதாகத் திகழ்வது இறையனார் களவியல் நூலும் அதன் உரையும். இறைவனால் எழுதப்பட்டது, குமரக்கடவுளால் கேட்கப்பட்டது, பத்து தலைமுறைகளாக எழுதப்பட்ட உரை வாய்மொழியே கேட்கப்பட்டு எழுத்தில் நிலைபெற்றது எனப் பாயிரத்தின் முகப்புரை பல்வேறு செய்திகளை முன்வைத்த போதிலும் 20 ஆம் நூற்றாண்டு ஆய்வில் அவையெல்லாம் விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டு பல்வேறு முடிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

    நூலும் உரையும் பல்வேறு விவாதங்களுக்கு உரியன என்றாலும் அறுபது நூற்பாக்கள் கொண்ட நூலைக் காலம் கடந்து நிலைபேறடையச் செய்துள்ள பெருமை அதன் உரையையேச் சாரும். உரை மொழி, உவமைகளின் திறன், விளக்கும் பாங்கு என உரைநுட்பங்களின் வழி களவியல் உரை தமிழ் இலக்கண உரை வரலாற்றில் தனித்த அடையாளத்தோடு திகழ்கிறது.

    பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இறையனார் களவியல் நூலும் அதன் உரையும் முதன் முதலாக 1883 ஆம் ஆண்டு சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்களால் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இப்பதிப்பு வெளியிடப்பட்ட பின்னர் இன்றுவரைடு வரை இறையனார் களவியலுக்குப் பல்வேறு பதிப்புகள் வெளிவந்துள்ளன. கல்விப்புலத்தின் பாடத்திட்டங்களில்  நம்பி அகப் பொருளும், தொல்காப்பியப் பொருளதிகாரமுமே பெரிதும் நிலைபெற, வாசிப்பிற்குள்ளாக இறையனார் களவியல் உரை அதன் கடினத்தன்மை நோக்கிப் பாடத்திட்டங்களில் இடம்பெறாமலே போய்விட்டது. இதனால் ஆய்வாளர்களின் கவனத்திற்குள்ளான பிரதியாகவே இறையனார் களவியல் இன்றுவரை திகழ்கிறது. 

கானல் நீர்



கானல் நீரொன்றின்
மாய அலையை
கண்ணுக்கெட்டிய
தூரத்தில் தேடிக்
கொண்டிருக்கிறேன்.

மாயை ஒன்றும்
எனக்கு புதிதல்ல
அது தன்னளவில்
போக்கு காட்டி மறைந்து கொள்ளும்.

கழைக்கூத்தாடி



காலம் கலைத்துப் போட்ட
கழைக்கூத்தாடி நான்
அரிதாரம் பூசி
அவதாரம் எடுக்கிறேன்.

எடுத்த அவதாரம்
இயல்பாய் தொலைக்கிறேன்
ஊர் ஊராய்ப் பயணிக்கிறேன்
உறக்கம் இல்லா
நாடோடி ஒருவனி்ன்
பாதம் சுமக்கிறேன்

தமிழ் நூல் தொகுப்புப் பாடல்கள் - ஐம்பெருங்காப்பியங்கள் (சீவகசிந்தாமணி ) குறித்த தொகுப்புப் பாடல்கள்



ஐங்காப்பியங்களைக் கூறும் வெண்பா

சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான்

கந்தா மணிமே கலைபுனைந்தான் - நந்தா

வளையாபதி  தருவான் வாசவனுக் கீந்தான்

திளையாத குண்டல கேசிக்கும்.

தமிழ் நூல் தொகுப்புப் பாடல்கள் - பதினெண் கீழ்க்கணக்கு (திருக்குறள், நாலடியார்) குறித்த தொகுப்புப் பாடல்கள்



பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்

பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம்

இன்னிலை காஞ்சியோ டேலாதி யென்பவே

கைந்நிலையு மாங்கீழ்க் கணக்கு.


திருக்குறள்

Saturday, July 4, 2020

சங்க இலக்கியச் சொல்வளமும் தமிழ்ச்சமூக ஆவணமும் - தமிழ்ச் சொல்வளம் - சங்க இலக்கியம் – பூவுலகு



மொழி அறக்கட்டளை பல்வேறு அரிய ஆவணங்களை அகராதியியல் நோக்கில் தொடர்ந்து உருவாக்கி வருகிறது. தற்காலத் தமிழ் மரபுத் தொடர் அகராதி, சொல் வழக்குக் கையேடு, தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதி முதலானவற்றைத் தொடர்ந்து சங்க இலக்கியங்களின் சொல்வளத்தினைத் தமிழ்ச் சொல்வளம் என்னும் வரிசையில் அடைவுபடுத்தி வெளியிட்டு வருகிறது மொழி அறக்கட்டளை. அகராதியியல் துறையிலும் நாட்டார் வழக்காற்றியல் துறையிலும் ஆழங்கால்பட்ட பேராசிரியர் பா.ரா.சுப்பிரமணியன் அவர்களின் கடுமையான உழைப்பில் உருவாகி வரும் இந்த சொல்வளப் பொருளகராதிகள் அதிக நம்பகத்தன்மை கொண்டவை.

சங்க இலக்கியத்தில் உள்ள சொற்களை அறிவதற்கு நமக்குத் துணைசெய்பவை சொல்லடைவுகள் மற்றும் பொருளடைவுகளே. கேரளப் பல்கலைக்கழகம் வழியாக உருவாக்கப்பட்ட சொல்லடைவுகள், தாமஸ் லேமன்தாமஸ் மால்டன் ஆகியோர் இணைந்து உருவாக்கிய சங்க இலக்கியச் சொல்லடைவு, பெ.மாதையன் அவர்களின் சங்க இலக்கியச் சொல்லடைவு, புலவர் மணியன் அவர்களின் சங்க இலக்கிய வினைவடிவங்கள், பாண்டியராஜா அவர்கள் இணைய வழி உருவாக்கிய சங்கத் தொடரடைவு (sangam concordance) முதலானவை சங்க இலக்கியத்தின் சொற்களைப் பலநிலைகளில் அடைவுபடுத்தித் தருகின்றன. புலவர் மணியன் அவர்களின் சங்க இலக்கிய வினைவடிவங்கள் சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள வினைகளையும் அவற்றின் வடிவங்களையும் நிரல்படுத்தி பொருண்மை வேறுபாடுகளோடு தருகிறது. அகராதியியல் நோக்கில் சில குறைபாடுகள் காணப்படினும் சங்க இலக்கிய வினை வடிவங்களை முழுவதுமாக அறிந்துகொள்வதற்கு இந்த நூலே பெரிதும் துணை செய்கிறது.